சிறையில் அடைத்து
காயடிக்க வைத்திருந்த
புரட்சி விதையொன்று
தப்பி வந்தது.
புரட்சி விடியலை எதிர்நோக்கும்
இருண்ட பூமியில்
நம்பிக்கை பிறந்தது.
நமக்கென்று சூரியன் புறப்படுமுன்னே
விடிவெள்ளி முளைத்துவிட்டதென்று.
விடியலுக்காய் காத்திருந்த
விடிவெள்ளியை
பொன்பரப்பியில் நாசக்காரர்கள்
நசுக்கியே கொன்றுவிட்டார்கள்.
பயிர்கள் தண்ணீருக்காய் அழும்போது
உழுதவனின் செந்நீரால்தான்
பயிரை பாதுகாக்க முடியுமென்றறிந்தபோது
அவனும்
தன் செந்நீரை தண்ணீராய் தரத்துணிந்தான்.
அணை நீரை விடச்சொல்லி
ஆணை பிறப்பதெப்போது
அணையையே தகர்த்துவிட்டால்....
தகர்த்துவிட ஆயுதம் தாங்குமுன்னே
ஆயுதத்தால் தாக்கப்பட்டான்.
அந்த விடிவெள்ளி
தமிழகத்தின் மண் பரப்பை
தன்கால்களாலேயே அளந்துபார்த்தான்
காவல் நிலையங்களில்
கண்காணிப்பு தொடரும்போது
துணிவை தன் தோளில்போட்டிருந்தவன்
அரிதாரமே இல்லாமல்
அலட்சியமாய் திரிந்தான்.
தாக்கிய மக்களை
தாக்குவதற்கு அவனுக்கொன்றும் சிரமமில்லை...
தாக்குவது அரிதாரம்போட்ட காவல் ஏவலர்கள்
அதையும்தாண்டி தாக்கினால்
அருகில் அழிவதுதன் இனமே...
இந்த மண்ணின்
புரட்சி சரித்திரம் எழுதும்போது
அவன் முதல் பக்கத்தில்...
முதல் வரியில்....
முதல் எழுத்தாய்....
கட்டாயம் இருப்பான்.
அப்போது தெரியும்
அவன் யாரென்று.
அவனை அடித்தே கொன்றவர்கள்
தன்னையே அழித்துக்கொள்ள தயாராய் நிற்பர்.
அவனுக்காய்
இந்த மண்ணும் கண்ணீர் விடும்
இம்மண்ணின் நம்பிக்கை நட்சத்திரத்தை
நசுக்கியே கொன்றவர்களை
நாம் சுமந்தோமே என்று...
அவனுக்காய்
மவுன அஞ்சலி செலுத்தாதீர்கள்
மவுன அஞ்சலியால் மதியிழந்தது போதும்
வீர வணக்கத்தை
வெறும் வாயால்...
வெறும் மனதால்...
மரியாதையாய்...
செலுத்திடாதீர்கள்.
வீர சரித்திரத்தை
படைத்துவிட்டு
அதையே அவனுக்கு பரிசாக்குங்கள்.
இது எழுதப்பட்ட நாள் 07/03/1988
இது எழுதப்பட்ட நாள் 07/03/1988
